MBBS படிப்பும் பயிற்சியும் சோழர்கள் காலத்தில் எப்படி இருந்தது? படித்துப் பாருங்கள் நட்பூக்களே

சோழர்கள் காலத்து தமிழும் மருத்துவமும்

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும். மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், மருத்துவர்களுக்கு ‘மருத்துவப்பேறு’ என்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது.

பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டில், நாமக்கல் குன்றுச் சரிவில் வெட்டப்பட்டிருக்கும் இம்மன்னரின் அரசாணைக் கல்வெட்டு ஒன்று நாமக்கல் பகுதியில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறப்பு மருத்துவர்களுள் ஒருவரான நாங்கூர் நாட்டைச் சேர்ந்த ‘சுவர்ணன் பாராசிரயன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான வைத்ய புரந்தரன்’ என்பவருக்கு வாழ்வூதியமாக மன்னர் நிலம் அளித்ததைப் பதிவுசெய்துள்ளது. இக்கல்வெட்டில் மருத்துவர் புரந்தரர் ‘அங்க வைத்தியர்’ எனச் சுட்டப்படுகிறார்

தமிழகத்தில் சோழர் காலத்திலிருந்த மருத்துவச் செய்திகளைப் பற்றியும் ஒரு சில கல்வெட்டுக்களே அறியத்தருகின்றன. ஆதுலர்சாலை மற்றும் ஆரோக்கியசாலை என மருத்துவமனைகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவடுதுறை, கீர்களூர், கூகூர் மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் சோழர்காலம் மருத்துவம் குறித்து சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்புமிக்கது எனச் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கோயில் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

முதலாம் ராஜேந்திரனின் மகன் வீரராஜேந்திரனின் 5 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று இவனது காலத்தில் திருமுக்கூடல் கோயிலில் வேதக் கல்லூரியும், மருத்துவமனையும் இயங்கியதைப் பதிவு செய்துள்ளது.

இச்சிறப்புமிக்க கல்வெட்டில் ஆதுலர் சாலை என்று அறியப்பட்ட மருத்துவச்சாலை பற்றிய குறிப்புகள் உள்ளன.

இக்கோயிலில் 15 படுக்கைகள் கொண்ட “வீரசோழன்” என்ற மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. ‘வியாதிபட்டுக் கிடப்பார்’ என நோயாளிகள் குறிப்பிடப்பட்டனர்.

நோயாளி ஒருவருக்கு ஒருவேளை உணவுக்கு 1 நாழி அரிசி கொடுக்கப்பட்டது. மருத்துவச்சாலை விளக்கெரிக்க இரண்டேகால் காசும், விளக்கொன்றுக்கு ஆழாக்கு நெய் வழங்கப்பட்டதும் தெரிகிறது.

நாடி பார்த்து மருத்துவம் செய்யும் பொது மருத்துவர் ஒருவரும், அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒருவரும் இந்த ஆதுலர் சாலையில் பணியாற்றியுள்ளனர். மருத்துவர் ஆதுலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அறுவைச்சிகிச்சை மருத்துவர் “சல்லியக்கிரியை பண்ணுவான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நாடி மருத்துவரின் பெயர் ‘ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டர்’ என்பதாகும். இவருக்கு நாளொன்றுக்கு ஊதியம் 3 குறுணி நெல்லும் 4 காசுகளும். அறுவைச்சிகிச்சை மருத்துவரின் ஊதியம் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 2 காசுகளும் ஆகும்.

மருத்துவர்களைத் தவிர்த்து அவர்களுக்கு உதவியாளர்களாக மருந்து தயாரிக்கத் தேவையான மூலிகைச்செடிகளைக் கொண்டு வருவதற்காகவும், அவற்றைக் கொண்டு மருந்து தயாரிப்பதற்காகவும் ‘மருந்தாய்ந்து கொடுப்பார்’ என்ற மருந்து கொண்டுவருபவர் இருவர் பணியாற்றினார். இவர்கள் விறகும் சேகரித்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 1 காசும் ஊதியம் பெற்றனர். மேலும், கத்தியைத் திறம்பட உபயோகிக்கும் சவரத்தொழில் செய்யும் நாவிதர் ஒருவரும் சவரத்தொழிலுடன் அறுவைச் சிகிச்சையும் செய்துள்ளார்.
இவரும் மருத்துவர் என்றே அழைக்கப்பட்டார்.

மகப்பேறு மருத்துவத்தில் உதவிய நாவிதர் மனைவி ‘மருத்துவச்சி’ என அழைக்கப்பட்டார். நாவிதருக்கு ஊதியமாக நாளொன்றுக்கு 4 நாழி நெல் அளக்கப்பட்டது.

மருத்துவச்சாலை சிறப்பாக இயங்குவதற்கு மேலும் சில பணியாட்களும் இருந்தனர். ‘நீர் கொண்டு வருபவர்’ ஒருவர் மருத்துவச் சாலைக்குத் தேவையான நீர் கொண்டுவரும் பணியிலிருந்தார். ஆண்டொன்றுக்கு 15 கலம் நெல் அவருக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்டது. ‘மருந்து ஆடும் பெண்கள்’ என அழைக்கப்பட்ட மருத்துவப்பணி மகளிர் இருவரும் பணியாற்றினார்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 4 நாழி நெல்லும் அரைக்காசும் ஊதியமாகக் கொடுக்கப் பட்டது.

மருத்துவ மனையில் பின்வரும் 17 மருந்துகளும், தைலங்களும், கல்பங்களும் எந்த அளவில் இருப்பில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த மருந்துகளைப் பாதுகாக்க 40 காசுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைக் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

1) பிராமியம் கடும்பூரி (1 எண்ணிக்கை);
2) வாசா ஹரீதகி (2 படி); 3) தஸ-மூலா-ஹரீதகி (1 படி);
4) பல்லாதக-ஹரீதகி (1 படி);
5) கண்டீரம் (1 படி);
6) பலாகேரண்ட தைலம் (1 தூணி);
7) லசுநாக ஏரண்ட தைலம் (1 தூணி); 8.பஞ்சக தைலம் (1 தூணி);
9) உத்தம கர்ணாதி தைலம் (1 தூணி);
10) பில்வாதி கிருதம் (1பதக்கு);
11) மண்டூர வடகம் (2000 எண்ணிக்கை);
12) திராவத்தி (1 நாழி); 13) விமலை (2000 எண்ணிக்கை);
14) சுனேற்றி (2000 எண்ணிக்கை);
15) தம்ராதி (2000 எண்ணிக்கை);
16) வஜ்ரகல்பம் (1 தூணி 1 பதக்கு);
17) கல்யாண லவணம் (1 தூணி 1 பதக்கு).

சோழர் காலத்தில் இத்தகைய மருத்துவப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இந்த ஏற்பாடுகள் மதுராந்தக சதுர்வேதிமங்கல மகாசபையின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டதையும் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. இப்பெரிய கல்வெட்டுச் செய்தி தவிர்த்து மேலும் சில சோழர் கால கல்வெட்டுகள் அவர்கள் காலத்து மருத்துவப் பணிகளையும் அவற்றுக்கான கொடைகளையும் அறியத் தருகின்றன.

விக்கிரமசோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு திருவாவடுதுறையில் ஒரு மருத்துவக் கல்லூரி இருந்ததைக் குறிப்பிடுகிறது. இக்கல்லூரியில் 364 மருத்துவ மாணவர்களுக்குக் கல்வியுடன் உணவும் அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கும் பொது மருத்துவர், அறுவை மருத்துவர் மற்றும் மருந்தாடு பெண்டுகள் குழுவினர் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தனர் சோழர் காலத்து ஆதுலர் சாலைகள் கோயில்களில் இயங்கியதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. குன்றத்தூரில் சரவணன், அரையன், சந்திரசேகரன், கோதண்டராம அசுவத்தாமபட்டர், மங்களாதி ராஜன், சீராளன் என்ற மருத்துவர்களின் பெயர்களும் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு சைவசிந்தாமணி, சிவகீர்த்தி, கடகமெடுத்த கூத்தபிரான் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தது என்ற குறிப்பும், பல்லவர்கால மருத்துவமுறைகள் சோழர்காலத்திலும் தொடர்ந்தது என்ற தகவலும் கிடைக்கின்றன.

மகப்பேறு மருத்துவம் ‘சூல் மருத்துவம்’ என அழைக்கப்பட்டுள்ளது. திருத்துறைப் பூண்டியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் கருவறையின் வடபுறத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் களப்பால் சபையார் சூல்மருத்துவக் காணிக்கையாக நிலக்கொடை கொடுத்ததைப் பதிவு செய்கிறது. கி.பி. 10, 11 காலத்திய கல்வெட்டு கீரக்கடூர் மன்னனின் ஆட்சிக்காலத்தில் பரசுராமர் என்பவர் சிறந்த சூல் வைத்தியர் என்றும், சிசு மருத்துவத்திற்காக 250 கழஞ்சு பொன் சிசுவைத்தியக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. தகட்டூர் கிழவன் சிசு மருத்துவசாலைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டதாக கி.பி. 1221 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

திருவரங்கத்தின் அரங்கநாதர் கோயிலின் 1257-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றும் ஆதுலர் சாலை பற்றிய குறிப்பைத் தருகிறது. தனது குருவாகிய ஸ்ரீ ராமானுஜரின் அறிவுரைப்படி கருட வாகன பட்டர் என்பவர் நான்காம் பிரகாரத்தில் ஒரு ஆதுலர் சாலையை அமைத்துள்ளார்.
என்கிறது அந்தக் கல்வெட்டு. நான்காம் பிரகாரத்திலிருந்த திருநடை மாளிகையின் இடைக் கூடத்தில் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, அது ஒரு நீண்ட அறையாக மாற்றப்பட்டு அதில் ஆரோக்கிய சாலை நடத்தும் பொறுப்பு கருட வாகனப் பட்டரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஹொய்சாள மன்னர் வீர இராமநாதரின் முதன்மைத் தளபதி சிங்கதண்ட நாயக்கர் இவ்வாறு ஆதுலர் சாலை அமைக்க உதவியதாகத் தெரியவருகிறது.
“முன்னாள் பிரதாப சக்ரவர்த்தி காலம் முதல் இவருடைய பூர்வாள் கருட வாகன பட்டர் நடத்தி வந்த “ஆதுலர் சாலை.”
என்று கி.பி. 1493-ஆம் ஆண்டைச் சேர்ந்த மற்றொரு திருவரங்கக் கல்வெட்டு குறிப்பிடுவதால், இந்த ஆதுலர் சாலை பல ஆண்டுகள் இயங்கியதையும், பிற்காலத்தில் அந்த ஆதுலர் சாலை மீண்டும் மூன்றாம் கருட வாகன பட்டரால் புனரமைக்கப் பட்டதையும் அறியலாம்.

தஞ்சையின் தேவராயன் பேட்டை கோயில் கல்வெட்டு ‘சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலை’ ஒன்று தஞ்சையில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. இந்த ஆதுலர் சாலைக்கு இளவரசி குந்தவை ’9 மா’ நிலம் நன்கொடை அளித்துள்ளதும், பின்னர் முதலாம் ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு (கி.பி. 1015) காலத்துக் குறிப்பின்படி, இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டு மருத்துவ சேவைக்கு நிதி பெறப்பட்டதும், மேலதிக நிதித் தேவைக்கு களகரச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் தனது நிலத்தினை விற்று மருத்துவமனைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்டியதையும் (கி.பி. 1019) கல்வெட்டுக் குறிப்புகள் அறியத் தருகின்றன

மருத்துவர்களுக்குக் கொடையாக ‘மருத்துவக்காணி’ என்ற பெயரில் நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது. முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிக்கால கல்வெட்டு ஒன்று திருவிசலூர் என்ற கும்பகோணத்தை அடுத்துள்ள ஊரின் சிவயோகநாதர் ஆலயத்தில் காணப்படுகின்றது. அறுவைசிகிச்சை மருத்துவர் ஒருவரின் மருத்துவப்பணிக்காக நிலமும், வீடும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது . முதலாம் ராஜேந்திரனின் சகோதரி இளவரசி குந்தவை வேம்பத்தூரில் வாழ்ந்த அறுவைச் சிகிச்சை மருத்துவர் பிரயோகத்தரையன் என்பாருக்கு அவ்வூரில் உள்ள ஒரு வீட்டையும், ஒரு வேலி ’4 மா’ நிலத்தையும் மருத்துவப்பணிக்கான கொடையாக வழங்கியுள்ளார்.

அரச குடும்பத்தினர் மட்டுமன்றி அரசர் உருவாக்கிய ஆதுலர் சாலைகளின் பராமரிப்பிற்குப் பொதுமக்களும் ஊர்ச்சபையினரும் நன்கொடைகள் வழங்கியுள்ளனர் என்பதையும் கல்வெட்டுப் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. வீர ராஜ ராஜன் நிறுவிய திருப்புகலூர் மருத்துவமனை குறித்து விக்கிரம சோழர் காலத்திய கல்வெட்டு ஒன்று குறிப்பு தருகிறது. முடிகொண்ட சோழர் பேராற்றின் வடகரையில் நிறுவப்பட்டிருந்த திருப்புகலூர் மருத்துவமனைக்கு, சத்திரிய நாத சதுர்வேதி மங்கலத்து ஊர்ச்சபையினர் வரி விலக்களிக்கப்பட்ட நிலம் ஒன்றைக் கொடையாக வழங்கியுள்ளனர் என்பதை திருப்புகலூர் கல்வெட்டு கூறுகிறது.

மருத்துவ மனையிலிருந்து வெளிவரும் நோயாளிகள் இலவசமாகத் தங்கி ஓய்வெடுக்கவும், சத்துணவு உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை இரண்டாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம் . திருத்தொண்டத் தொகையான் என்பவர் திருமடத்திற்கு நன்கொடையாக அளித்த நிலத்தின் வருவாயின் ஒரு பகுதியின் மூலம் அங்கு அந்த மடத்தில் தங்கிச் செல்லும் நோயாளிகளுக்கும் பயணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்ட செய்தியை மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246-1279) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

திருப்புவனை என்ற ஊரில் மன்னர் பராந்தகரின் மனைவியின் பெயரில், ‘திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. இக்கோயில் சிற்பங்களில் ஒன்று யானைக்கும் மருத்துவம் பார்த்த காட்சியைக் காட்டுகிறது.

சோழர் காலத்துக் கோயில்கள் மருத்துவ மனைகளாகவும் இயங்கியது தெரிகிறது. நோயாளிகளிடம் கட்டணம் பெறாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: